Tuesday, December 24, 2019

16 செல்வங்கள் – 15) துன்பம் இல்லாத வாழ்வு


எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ

இறைவனால்
படைக்கப்பட்ட
ஓர்
இன்பச்சோலை
இந்த உலகம்

மனிதன்
தன் வாழ்வில்

இன்பத்தைத்
தவறாகப்
பயன்படுத்தியதால்
பெற்றதே துன்பம்

இன்பம் வருவதும்
துன்பம் வருவதும்
எடுத்த உடலின்
வரம் என்று
அவன்
தன்னைத் தானே
தேற்றிக் கொள்கிறான்

இன்பமும் துன்பமும்
யாவருக்கும் உண்டு
எனத்
தனக்குத் தானே
ஆறுதல் கொள்கிறான்

காலம்
ஒரு கட்டத்தில்
அவனுக்கு
உண்மையை
உணர்த்துகிறது

இன்பமும் துன்பமும்
உள்ளத்தின்
இயல்பு என்று.

ஒருவருக்கு
இன்பமாகப்படுவது
மற்றொருவருக்கு
துன்பமாகப்படுகிறது

ஒருவருக்கு
துன்பமாகப்படுவது
இன்னொருவருக்கு
இன்பமாகப்படுகிறது

அப்பொழுது

அவன் உள்ளத்தில்
”எது
உண்மையான இன்பம்....?”
என்று ஒரு
கேள்வி எழுகிறது
அதற்கான
விடையும் கிடைக்கிறது

”புறத்தில் காண்பது
இன்பம் இல்லை
அகத்தில்
அறிந்து தெளிவதே
உண்மை இன்பம்.”

இம்மையிலும்
மறுமையிலும்

எல்லோரும் விரும்பும்
இன்பச் செல்வம்

மகிழ்ச்சியான வாழ்வு



- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு

- Vellore Author P. Rajan Babu




No comments:

Post a Comment