Tuesday, December 24, 2019

16 செல்வங்கள் – 9) தவறாத சந்தானம்


9) தவறாத சந்தானம்

தன்னலம் சார்ந்தது
துறவறம்
பிறர்நலம் சார்ந்தது
இல்லறம்

மனித வாழ்வில்
ஓர் ஆணும்
ஒரு பெண்ணும்

இல்லறம் என்னும்
நல்லறத்தில்

கணவன் மனைவியாய்
இணைந்து பெறும்
இன்பப் பரிசு

காதலுக்கும் கடமைக்கும்
ஆண்டவன் தரும்
அன்புப் பரிசு

பிள்ளைகள்.

ஈன்ற பொழுதில்
கண்ணுக்கும்
மழலைச் சொல்லால்
காதுக்கும்
உச்சி முகர்ந்தால்
மூக்குக்கும்
துழாவிய சோற்றால்
வாய்க்கும்
உடல் தீண்டினால்
மெய்க்கும்

என
ஐம்புலன்களுக்கு
மட்டுமல்ல

மனதிற்கும்
மகிழ்ச்சியூட்டும்

இல்லத்தின்
இன்ப ஊற்றுகள்.

வளர்ந்து
பெற்றோருக்கு

மதிப்பும் மரியாதையும்
பெற்றுத் தரும்

சொர்க்கத்தின்
திறவுகோல்கள்

பண்புடையர் என்று
பெயர் எடுத்து
தாய்க்கும்

அறிவுடையர் என்று
பெருமை பெற்று
தந்தைக்கும்

அளவில்லாத
ஆனந்தத்தை
அள்ளித் தரும்
பரம்பரை சொத்துக்கள்

வம்சத்தை
விருத்தி செய்திடும்
வாழையடி வாழைகள்

அனைவரும் வேண்டிடும்
தலைச்சிறந்த செல்வம்

குற்றமில்லாக் குழந்தைகள்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment